தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் சற்று முன்னர் நுழைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மலர் தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்குடன் இன்றும் நாளையும் பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
அங்கு தீவிர பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் இன்று முற்பகல் 10 மணி முதல் பல்கலைக்கழக வாயிலில் திரண்ட மாணவர்கள் பல்கலைககழகத்துக்குள் நுழைந்து நினைவேந்தலை நடத்த முயன்றனர்.
எனினும் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கதவுகளைப் பூட்டி மாணவர்கள் உட்செல்லமுடியாதவாறு தடுத்தனர்.
ஆனால் அங்கு குவிந்த மாணவர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாவீரர் நினைவேந்தல்களை செய்தனர்.
இந்த நடவடிக்கைகளால் பல்கலைக்கழக சூழலில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.