ரஷியாவில் பயணிகள் பேருந்து இன்று ஆற்றில் கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் 19 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
ரஷியாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் நெருஞ்சாலை ஒன்றில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் முன்பக்க ரயர் ஒன்று வெடித்தது.
இதனையடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது.
மாஸ்கோவிலிருந்து கிழக்கே 6,320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரேடென்ஸ்க் நகரிலிருந்து சிட்டா நகரத்திற்கு பயணிக்கும் இந்தப் பேருந்து குயங்கா ஆற்றில் பாய்ந்ததாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆற்றில் பாய்ச்த பேருந்தில் 43 பயணிகள் மற்றும் ஒரு ஓட்டுநர் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வீதிப் பாதுகாப்பில் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யாவில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 18,214 பேர் இறந்ததாக அந்நாட்டு போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1979 முதல் 1989-ஆம் ஆண்டுவரை 10 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் போரின்போது கொல்லப்பட்ட 15,000 சோவியத் படைவீரர்களை விட அதிகமான உயிரிழப்பு ஒரே வருடத்தில் வீதி விபத்துக்களில் நேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.