அலரி மாளிகையில் திருட்டுத்தனமான கொடுக்கல் - வாங்கல் தொடர்பான கடிதங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களின் கொடுக்கல் - வாங்கல்களுடன் தொடர்புடைய பல்வேறு கடிதங்கள் அலரி மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறான எந்தக் கடிதங்களையும் அலரி மாளிகையில் தனது ஆட்சியின் காலத்தில் தயாரிக்கவில்லை என்று அவர் அதில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்கள் எந்தவித அடிப்படைக் காரணங்களும் அற்றவை எனக் கூறியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் தனக்குக் கீழ் பணி செய்த அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதங்கள் அனைத்தும் அலரி மாளிகையிலும், பிரதமர் அலுவலகத்திலும் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.