ஐரோப்பிய தமிழர்கள் தினம் ஜேர்மனியில் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஜேர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள 'லிண்டன்' அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற லிண்டன் அருங்காட்சியகத்துக்கு ஆண்டுதோறும் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்துள்ளதால் அவரைப் பற்றி உலக மக்கள் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என தமிழ் மரபு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரெடரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரால் ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னா எழுதிய 'திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்' என்னும் புத்தகமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், விழா மலரும் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 'லிண்டன்' அருங்காட்சியக இயக்குனர் இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாசினி, எழுத்தாளர் கவுதம சன்னா உள்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.