பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு 2500 பவுண்ட் அபராதம் விதித்து லண்டன் வெஸ்ற்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அங்கு திரண்டிருந்த தமிழ் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடியுள்ளனர்.
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக லண்டனில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 2500 பவுண்ட் அபராதம் விதிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கு நடைபெற்ற வேளை நீதிமன்ற வளாக முன்றலில் திரண்டிருந்த மக்கள் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தனர் என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.