13 ஆவது திருத்த சட்ட மூலத்தை ஒழிக்க வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத போக்குடியவர்கள் கூறிவருகின்றனர். எனினும் நாட்டின் நிர்வாக கட்டமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்க்க வேண்டும் அதனை ஒழிக்க வேண்டும் என தென்னிலங்கையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இது புதிதான விடயம் அல்ல.எனினும் தற்போது பொதுபல சேனாவின் தலைவர் ஞானசாதார தேரர் கூறியுள்ளார்.13 ஆவது திருத்த சட்ட மூலத்தை ஒழிக்க வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத போக்குடியவர்கள் கூறிவருகின்றனர். அந்த வரிசையில் இவரும் இதனை கூறியுள்ளார்.
13 ஐ பொறுத்தவரையில் இந்த சட்ட் மூலம் வந்த காலத்தில் இருந்தே தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிவருகின்றோம்.அத்துடன் இந்த சட்ட் மூலத்தினை ஓர் ஆரம்ப புள்ளியாக வைத்து பயணிக்க முடியும் என்றே நம்பி வருகின்றோம்.
இந்த சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பின் ஓர் அங்கமாக இருந்தே இப்போதும் வருகின்றது. இதன் ஊடாக மாகாண சபை முறைமை உருவானது. இந்த முறைமை அதிகார பரவலாக்கம் என்ற விடயத்தின் அடிப்படையாக அமைகின்றது.
குறிப்பாக ஐநாவின் அதிகார பரவலாக்கம் என்பதில் மாகாண சபை முறைமையே கூறப்பட்டுள்ளது. எனவே நாட்டின் நிர்வாக கட்டமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்ட் மூலம் தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
இத்துடன் அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் சிலரை ஜனாதிபதி விடுத்துள்ளதாக செய்திகள் பரவியிருந்தது. என்னை பொறுத்தவரையில் அவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்பட்டதாக நான் அறியவில்லை. இது எண்ணத்தை காட்டுகின்றது என்றால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்ற மாயையை உருவாக்கி நாட்டில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர் ஆனால் இராணுவத்தினர் சிறையில் உள்ளனர் என்ற தோற்றப்பாட்டினை உருவாக்க சில தென்னிலங்கை சக்திகள் முயல்கின்றனர்.
இதன் ஊடாக பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுதலை செய்ய சதிகள் நடைபெறுகின்றனவா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இது முழுக்க முழுக்க புலனாய்வு தகவலாளிகளின் திட்டமிட்ட செய்தியாகவே நான் பார்க்கின்றேன் என்றார்.