இன்ப்ளுயன்ஸா(H1N1) வைரஸ் தொற்றை ஒத்த அறிகுறிகளுடன் இலங்கையில் சில நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தும்மல் மற்றும் இருமல் மூலம் வேகமாக பரவும் இந்த நோய், நாட்டி;ல் நிலவிவரும் மோசமான காலநிலையின் விளைவாக பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இன்ப்ளுயன்ஸா வைரஸ் தொற்றை ஒத்த அறிகுறிகளுடன் நோயாளிகள் சிலர் அனுராதபுரம் மாவட்டத்தில் இனங்காணப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
இன்ப்ளுயன்ஸா நோய்க்கு சிகிச்சையளிக்கும் டமிஃப்ளூ (Tamiflu) என்ற மருத்து விலை அதிகமானதாகும். தனியார் மருந்தகங்களில் இது 4000 ரூபாவுக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. எனினும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்தை இலவசமாக பெறமுடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் போன்றவர்கள் இந்த நோய்த்தாக்கத்துக்கு இலகுவில் ஆட்படக் கூடிய ஆபத்து உள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விட்டுவிட்டுக் காய்ச்சல், நடுக்கம், இருமல், தொண்டை வலி, கண்கள் சிவத்தல், உடல் வலி, தலைவலி. போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்.
உரிய வகையில் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் மரணம் ஏற்படும் ஆபத்துள்ளதால் இந்த நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.