வடகொரியாவுக்கு எதிரான கொள்கைகளை கைவிடும் வரை அமெரிக்காவுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் இல்லை என ஐ.நா.வுக்கான வடகொரியா தூதர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அமெரிக்காவுடன் பேச வேண்டிய தேவையில்லை. அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தையில் இருந்து வட கொரியா வெளியேறிவிட்டது எனவும் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
எனினும் அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்கா-வடகொரியா இடையே உடன்பாடு எட்டப்படும் என தான் இன்னும் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதேசமயம் வடகொரியா என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா நேற்று இரு ஆயுத சோதனைகளை நடத்தியது.
வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள சோஹே செயற்கைகோள் ஏவுதளத்தில் இந்த மிக முக்கிய ஆயுத சோதனை நடத்தப்பட்டதாக வடகொரிய தேசிய பாதுகாப்பு அறிவியல் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த சோதனையின் முடிவு வடகொரியாவின் போர்திறனுக்கான மாற்றத்தில் முக்கிய விளைவை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
எனினும் எந்த மாதிரியான ஆயுதம் சோதிக்கப்பட்டது? என்பது பற்றி அவர் தெளிவுபடுத்தவில்லை.
எனினும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அல்லது ஏவுகணை செலுத்தும் திறனை அதிகப்படுத்துவதற்கான ரொக்கெட் என்ஜின் சோதிக்கப்பட்டிருக்கலாம் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.