ஐபிஎல் 2020-ம் ஆண்டுக்கான ஏலம் கொல்கத்தாவில் எதிர் வரும் 19-ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் அனைத்தும் பெங்களூரில் நடைபெற்றுவந்த நிலையில், பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவராக கங்குலி பதவி ஏற்றுள்ளதையடுத்து இந்த முறை ஏலம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கமாக வீரர்கள் ஏலம் குறித்த அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வர்ணனை செய்யப்படும். ஆனால், முதல் முறையாகப் பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இம்முறை நேரலை வர்ணனை செய்யப்பட உள்ளது.
இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் ஏலத்துக்காக வெளிநாடு, உள்நாடு என மொத்தம் 971 வீரர்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதில் 332 பேர் மட்டுமே ஏலத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஐபிஎல் போட்டியில் ஏற்கெனவே விளையாடிய அனுபவம் உடைய 19 இந்திய வீரர்கள், 24 புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் மே.இ.தீவுகள் கேஸ்ரிக் வில்லியம்ஸ், வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ஆஸி, சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா ஆகியோர் முதல் முறையாக இடம் பெறுகிறார்கள். 8 அணிகளிலும் தற்போது 73 வீரர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறுவார்கள்.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: