தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக புகென்வில் மக்கள் வாக்களித்துள்ள நிலையில் விரைவில் உலகில் 196 ஆவது தனி நாடாக புகென்வில் உருவாகவுள்ளது.
பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோரெஸ்பிக்கு வடமேற்கே 959 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய தீவான புகென்வில் 97.7 வீத மக்கள் அண்மையில் நடைபெற்ற சுதந்திர தனி நாட்டுக்கான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அவுஸ்திரேலியாவின் அருகே பல தீவுகளை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட பப்புவா நியூ கினியா. நாட்டின் ஒரு பகுதியாக புகென்வில் உள்ளது.
அவுஸ்திரேலியாவின் வசம் இருந்த பப்புவா நியூ கினியாவில் இருந்து புகென்வில்லை தனியாக பிரிக்க வேண்டும் என 1975 ஆம் ஆண்டே கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் தங்கம் மற்றும் கொப்பர் சுரங்கங்கள் நிரம்பிய போகன்வில்லை தனி நாடாக அறிவிக்க வல்லாதிக்க சக்திகள் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வந்தன.
ஆனால் பொருளாதார சுரண்டலுக்காக தங்களை அடிமைப்படுத்தப்படுவதை உணர்ந்த புகென்வில் இளைஞர்கள் 1988-இல் கொதித்து எழுந்து புகென்வில் சுதநதிரத்துக்கான போராட்டத்தை ஆரம்பித்தனர்.
வல்லாகத்திக்க சக்திகளின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து எந்த உதவியும் இன்றி தனித்து நின்று புகென்வில் மக்கள் 10 ஆண்டுகள் கடுமையாகப் போராடினார்கள்.
3 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட 9318 சதுர கிலோமீற்றர் பரப்பளவேயான இந்தச் சிறிய தீவில் சுமார் 20 ஆயிரம் பேர் இந்தப் போரில் கொல்லப்பட்டனர்.
சளைக்காத புகென்வில மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்தின் பின்னர் அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 20 ஆண்டுகளில் புகென்வில் தனி நாடாக அறிவிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என 2001ல் உறுதியளிக்கப்பட்டது.
அதன் பேரில் புகென்வில்லில் வசித்து வந்த மக்களிடம் பல்வேறு கட்டங்களாக கடந்த மாதம் சுதந்திரத் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது 97.7 வீத மக்கள் புகென்வில் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து புகென்வில் விரைவில் தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட உள்ளது.
உலகில் 195 நாடுகள் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக உள்ள நிலையில் புதிதாக அறிவிக்கப்படும் புகென்வில் 196வது நாடாக உருவாகவுள்ளது.
உலகின் மிகச்சிறிய நாடுகளின் வரிசையில் சுதந்திர புகென்வில் விரைவில் இணையவுள்ளது.