இந்தியாவிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் விரைவில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய புதிய குடியுரிமைச் சட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தியாவிலிருந்து மீண்டும் நாட்டிற்கு வருகை தருகின்றவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழர்களின் விகிதாசாரம் குறைவடைந்து வருவதாகவும் தமிழர்களின் பலத்தை நிரூபிக்கவும் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாலும் இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.