ரெலோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட கட்சியின் முக்கிஸ்தர் சிறீகாந்தா தனது புதிய கட்சிக்கான பெயர் குறித்த அறிவிப்பினை விடுத்ததை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய மற்றம் வெளியேற்றப்பட்டோர் தம்மை அடையாளப்படுத்தும் கட்சிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முரண்பாடு காரணமாக கட்சியின் பொறுப்பிலிருந்தும் அங்கத்துவத்திலிருந்தும் கட்சியின் தலைமையால் சிறீகாந்தா உட்பட்ட யாழ்ப்பாணப் பிரதிநிதிகள் சிலர் வெளியேற்றப்பட்டிருந்தனர். அதனை அடுத்து ஊடகச் சந்திப்பினை நடத்தியிருந்த சிறீகாந்தா புதிய கட்சி குறித்த அறிவிப்பை விடுத்திருந்தார். இருப்பினும் பெயர் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தங்களுடைய கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமது கட்சி தமிழ்த் தேசியக்கட்சி என்று செயற்படும் என்ற அறிவிப்பினை விடுத்துள்ளார்.
இதேவேளை இன்று மாலை ஊடகச் சந்திப்பு ஒன்றுக்கான ஏற்பாட்டினையும் சிறீகாந்தா மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோவின் மற்றொரு கூட்டமும் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சிறீகாந்தா தலைமையில் புதிதாக தொடங்கியுள்ள தமிழ்த் தேசியக்கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் பத்து கட்சிகள் ஊடாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளமை தொடர்பிலான விபரம் வருமாறு,
01. தமிழ்க்காங்கிரஸ் மற்றும் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
02. ஈபிஆர்எல்எவ்
03. சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ்மக்கள் கூட்டணி
04. ஈபிஆர்எல்எவ் பொ.ஐங்கரநேசன் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
05. தமிழரசுக்கட்சி அனந்தி சசிதரன் (முன்னாள் மாகாண அமைச்சர்)ஈழமக்கள் சுயாட்சிக் கழகம்
06. தமிழரசுக்கட்சி வி.எஸ்.சிவகரன் (முன்னாள் இளைஞர் அணித் தலைவர்)தமிழரசுக்கட்சி ஜனநாயக அணி
07. புளொட் வியாழேந்திரன் (நாடாளுமன்ற உறுப்பினர்) முற்போக்கு தமிழர் கட்சி
08. தமிழரசுக்கட்சி ஜெயானந்த மூர்த்தி கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி
09. ரெலோவில் சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழ்த் தேசியக்கட்சி
10. தமிழரசுக்கட்சியின் கனகரத்தினம், பியசேன, கிசோர் உட்பட்டவர்கள் பொதுஜன முன்னணிக் கட்சியிலும் அங்கத்துவம் பெறுகின்றனர்.
ஐந்து கட்சிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் தற்போது பத்துக் கட்சிகளின் பிரநிநிதிகளாகியுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தைத் தோற்றுவித்துள்ளன.