வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து தகவல்களை வெளிப்படுத்தியவர்களிடத்தில் பக்கச்சார்பான விசாரணைகள் நடத்தப்பட்டு முழுமையான விடயங்கள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அத்துடன் புதிய ஆட்சியாளர்கள் வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் அறிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கு சொற்ப நாட்களுக்கு முன்னதாக இடம்பெற்ற ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று முதலைகளுக்குப் போடப்பட்டமை தொடர்பில் தகவல்களை வெள்ளை வானில் சாரதியாகப் பணியாற்றியதாகக் கூறி தன்மை அடையாளப்படுத்திய இருவர் வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த இருவரையும் கைதுசெய்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவர்களின் கைது தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"2015ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் ஜனநாயகம் மறுதலிக்கப்பட்ட ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான் கலாசாரம் அறிமுகமானது.
இந்தக் கலாசாரம் நடைமுறையில் இருந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவை முற்றுப்பெற்றிருக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலரும் என்னிடத்தில் நேரடியாகவும் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர். இந்தநிலையில்தான் குறித்த இரு நபர்களும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விடங்களை பகிரங்கப்படுத்துவதற்கு முன்வந்திருந்தனர். குறித்த நபர்களிடத்தில் நான் அதற்கான சாட்சிகள் இருக்கின்றனவா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கேட்டிருந்தேன்.
அந்த இரண்டு நபர்களும் நேரடியாக சாட்சியத்தைக் கொண்டிருப்பதாகவும் மற்றும் சில ஆவணங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்தநிலையில்தான் வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை அவர்கள் மூலமாக நான் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தேன்.
மேலும் அவர்கள் தமக்கான பாதுகாப்பை வழங்குமாறும் கோரியிருந்தார்கள். இந்தநிலையில் குறித்த விடயம் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரிடத்தில் நானே கோரியதோடு உரியவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறும் கோரியிருந்தேன்.
தற்போது அவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம் என்பதோடு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் தயாராகவும் இருக்கின்றேன்" - என்றார்.