தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அமைப்பாளராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் துணை மேயர் துரைராசா ஈசன் தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவை ஆட்சேபித்தும் அத் தலைமைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளையில் சச்சரவுகள் ஏற்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமைக்குழுவின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்டனர் எனத் தெரிவித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர், யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அமைப்பாளர் உள்ளிட்டவர்களைக் கட்சியின் பொறுப்புக்களிலிருந்து கட்சித் தலைமை இடைநிறுத்தியிருந்தது.
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தலைமையில் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிர்வாகக் குழுக் கூட்டத்திலேயே தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அமைப்பாளராக பிரதி மேயர் துரைராசா ஈசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தியாகராஜா நிரோஷ் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் என்பதும் மனித உரிமை நிறுவனம் ஒன்றின் இயக்குநராகவும் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர் பீடங்களில் செய்தியாளராகவும் பணியாற்றினார். துரைராசா ஈசன் கூட்டுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.