பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க இந்த அரசு முயல்வதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடக் கூடாது என தெரிவித்துள்ளமையானது கவலை அளிக்கின்றது. இவ்விடயத்தில் பலரும் கவலை அடைந்துள்ளனர். இதற்காக தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும், மலையக மக்களும் ஒன்றாக அணி திரள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கையில் புதிதல்ல. தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாம் எதிர்த்திருந்தோம். அவ்வாறான நிலையே இன்றும் தோற்றுவிக்கப்படுகின்றது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்தியா, இலங்கை ஜனாதிபதியை அழைத்து பேசியது. அவர்களின் பிரதான நோக்கம் சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்த கூடாது என்பதே ஆகும்.
இதன்போது, இந்தியாவில் வைத்தே ஜனாதிபதி இனப்பிரச்சினை விடயம் தொடர்பில் மாறுபாடான கருத்தினை தெரிவித்து வந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள தேசிய கீதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவும், சர்வதேச நாடுகளும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
எதிர்வரும் நாட்களில் நாம் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
இந்தியா இவ்விடயம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்- எனவும் அவர் தெரிவித்தார்.