மேற்கு ஜெர்மனியில் கிரெபெல்ட் மிருகக்காட்சி சாலையில் புதுவருட தினமான நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிம்பான்சிகள், மனித குரங்குகள் மற்றும் வயதான இரண்டு கொரிலாக்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட மிருகங்கள் தீயில் கருகி இறந்தன.
புத்தாண்டை முன்னிட்டு மிருகக்காட்சி சாலை மூடப்பட்டிருந்த நிலையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
மிருகக்காட்சி சாலையின் குரங்குகளின் இருப்பிடத்திலிருந்த அனைத்து குரங்குகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.
பறவைகள் மற்றும் வெளவ்வால்களும் இத்தீயிற்கு இரையாகியதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
40 வயதான பெண் சிம்பன்சி ஒன்று உட்பட இரண்டு சிம்பன்சிகளை மட்டுமே தீயணைப்பு வீரர்களால் தீயில் இருந்து மீட்க முடிந்தது. மீட்கப்பட்ட இரண்டு சிம்பன்சிகளும் தீக்காயங்களுக்கு உள்ளாயின. எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் வொல்ப்காங் டிரெஸன் கூறியுள்ளார்.
ஜேர்மனியர்கள் வழக்கமாக புதிய ஆண்டை பட்டாசுகளுடன் வரவேற்கிறார்கள். இந்நிலையில் பட்டாசால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் குறித்த தகவல்களை இப்போது வெளியிட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1975 இல் திறக்கப்பட்ட கிரெபெல்ட் மிருகக்காட்சிசாலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சரசரியாக 400,000 பார்வையாளர்கள் வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.