துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சனிக்கிழமை பல விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.
அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஓடுதளங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் துபாய் சர்வதேச விமான நிலைய செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்த முடியும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
கூடிய விரைவில் முழுமையாக சேவைக்கும் திரும்புவதற்கு நாங்கள் எங்கள் சேவை கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இருப்பினும் விமானம் புறப்படுவதில் தாமதங்கள், இரத்து செய்தல் மற்றும் விமானங்களை துபாய் வேர்ல்ட் சென்ரலுக்கு திருப்புதல் ஆகிய செயற்பாடுகள் நிலைமை சீராகும் வரை தொடரும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
துபாய் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ராஸ் அல் கைமா, அல் ஐன் முதல் ஆசாப் வரை நாளை ஞாயிற்றுக்கிழமையும் மழை தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.