மெக்சிகோவில் பாடசாலைக்கு துப்பாக்கியுடன் வந்த 11 வயது மாணவன் தனது ஆசிரியரைச் சுட்டுக்கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.
சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் மற்றொரு ஆசிரியரும் 5 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.
மெக்சிகோவின் கோவ்ஹூய்லா மாகாணத்தில் உள்ள டோரியான் நகரில் உள்ள தனியார் பாடசாலையிலேயே இந்தப் பரப்பரப்பு சம்பவம் இடம்பெற்றது.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தபோது கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என குறித்த மாணவன் கேட்டுள்ளார்.
அங்கு சென்று இரகசியமாக துப்பாக்கியை தயார் செய்துகொண்டு 11 வயதான மாணவன் தனது வகுப்பறைக்குள் மீண்டும் நுழைந்தான்.
தொடர்ந்து பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியையை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சிறுவன் சுட்டான்.
இதனையடுத்து சக மாணவர்களை நோக்கியும் அந்தச் சிறுவன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.
இதனால் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
துப்பாக்சிச் சூட்டுச் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு ஆசிரியர் மீதும் சிறுவன் சுட்டதில் அவரும் காயமடைந்தார்.
இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதேவேளை, சுப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் வகுப்பறையில் அமைதியானவன் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இட்பெற்ற அன்று மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாகவும் தம்மை கடுமையாக எச்சரிக்கை செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, நச்சுரல் செலக்சன் என்ற துப்பாக்கிச் சூட்டு வீடியோ கேம் இந்த செயலுக்கு வழிவகுத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கணினி விளையாட்டு பெயர் பொறிக்கப்பட்ட உடையை சம்பவ தினம் சிறுவன் அணிந்திருந்தான்.
அந்த விளையாட்டே சிறுவனை இவ்வாறான செயற்பாட்டுக்குத் தூண்டியிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.