இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இந்திய மத்திய புலனாய்வுத்துறை CBI தாக்கல் செய்த பதில் அறிக்கை தொடர்பில் உச்சநீதிமன்றம் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளன். 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக் குறித்து விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பட்டறி வாங்கி கொடுத்ததால் எனக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி பெல்ட் வெடிகுண்டு மூலம்தான் படுகொலை செய்யப்பட்டாரா? அவ்வாறாயின் இந்த பெல்ட் வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது? என்கிற விவரத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும் என அந்த மனுவில் பேரறிவாளன் கோரியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மனுதாரரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் பதிலளிக்குமாறு இத்திய மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மத்திய புலானாய்வுத் துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த வழக்கு தொடர்பில் ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள்தான் உள்ளன. புதிய விவரங்கள் எதுவும் இல்லை என நீதிபதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டனர்.
உண்மைகளைக் கண்டறித்து வெளிப்படுத்துவதற்குப் பதிலாக ஏற்கனவே சொல்லப்பட்ட விடயங்களையே மீண்டும் சொல்லியுள்ளதாக தீதிபதிகள் கடும் விசனம் வெளியிட்டனர்.
இந்த அறிக்கை குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை என என்று நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
இதனையடுத்து அந்த பதில் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் புதிய விவரங்களுடனான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டு வழக்கை அரை மணி நேரத்துக்கு ஒத்திவைத்தது.
மேலும் அரசு தரப்பில் சிரேஷ்ட வழக்கறிஞர்கள் மன்றில் ஆஜராகி இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
அரை மணி நேரம் கழித்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி நாகேஸ்வர ராவ் மத்திய புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் குறித்து மிகக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதேவேளை, பேரறிவாளன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னால் உள்ள பெரிய சதித்திட்டத்தை விசாரித்து அவரது கொலைக்கான வெடிகுண்டு எங்கிருந்து வந்தது? எப்போது? ஏங்கே? யாரால் தயாரிக்கப்பட்டது போன்ற விசாரணைகளை இன்னும் முடிக்கவில்லை என மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
வெடிகுண்டு தயாரிப்பு பற்றி அறிந்தவர் எனக் கூறப்படும் 21 சந்தேக நபர்களில் ஒருவரான நிக்சன் என்ற சுரேனை மத்திய புலனாய்வுப் பிரிவு இதுவரை விசாரிக்கவில்லை எனவும் பேரறிவாளர் தரப்பு சட்டத்தரணி மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
19 வயதில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் கால் நூற்றாண்டுகளை சிறையில் கழித்துவிட்டார். இந்நிலையில் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்யும்வரை அவரது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
கடந்த 1991 ஆண்டு மே 21ஆம் திகதி தமிழகம் - ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிடோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது உச்ச நீதிமன்ற உத்தரவால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குண்டு தயாரிக்க பட்டறி வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு மட்டுமே பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.