உக்ரேனிய பயணிகள் விமானம் 179 பேருடன் ஏவுகணையால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சிலரைக் கைது செய்துள்ளதாக ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசீன் எஸ்மெய்லி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்டவர்கள் யார்? எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? தாக்குதலுடன் அவர்கள் எந்த வகையில் தொடர்புபட்டுள்ளனர்? என்பன உள்ளிட்ட மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.
சென்ற வாரம், தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதிலிருந்த 176 பேரும் பலியாகினர்.
ஏவுகணைத் தாக்குதலில் விமானம் வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்ட தகவலை முதலில் மறுத்த ஈரானிய இராணுவம், பின்னர் தனி மனித தவறுகளால் விமானம் வீழ்த்தப்பட்டதாக ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து விமானம் சுட்டு விழுத்தப்பட்டமை குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வந்தன.
இந்நிலையிலேயே விமானத்தை தாக்கி விழுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் இன்று அறிவித்துள்ளது.