முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதிமன்றின் பிடியாணை உத்தரவுக்கு அமைய இன்று மாலை 6 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக்கு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் 111 ஏ (2) வது பிரிவின்படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடுவதற்கான குற்றத்தை செய்ததாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு சட்ட மா அதிபர் இன்று பிற்பகல் பணிப்புரை வழங்கியிருந்தார்.
அதனடிப்படையில் நுகேகொட நீதிவான் நீதிமன்றில் பிடியாணை உத்தரவைப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவரது நாடாளுமன்ற உறுப்பினருக்கான இல்லத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர்.
ஏற்கனவே அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த 04 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க மறுநாள் 5 லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்கபட்டதுடன் வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.