தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களை ஒட்டுமொத்த சர்வதேசமும் ஒருகணம் வியந்து பார்த்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா விமான சேவையில் இணைவதற்கான பாடநெறி மற்றும் பயிற்சிகளை நிறைவுசெய்த 45 ஆண் சிப்பாய்கள் மற்றும் 10 பெண் சிப்பாய்கள் என 55 பேருக்கு இன்றைய தினம் உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்வு திருகோணமலை சீனன்குடா துறைமுகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே உலக நாடுகளுக்கு தற்கொலை அங்கி மற்றும் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் படகு என்பவற்றை அறிமுகப்படுத்தியவர்.
வன்னி இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல கீலோ மீற்றர்களுக்கு மண் திட்டுக்களை அமைத்து இராணுவத்தின் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார்கள்.
இதன்போது விமானப்படை அந்த மண்திட்டுக்களை பாராமல் புலிகள் மீது தாக்குதல் நடத்தி இராணுவத்தின் பயணத்திற்கு ஒத்துழைப்பு செய்தது.
அந்தப் பயணமானது வேகமடையக் காரணம் விமானப்படையின் தாக்குதல்களினால் ஆகும். அதுமாத்திரமல்ல, வீடியோ கமராக்கள் பொருத்தப்பட்ட யூ.ஏ.வி தொழில்நுட்பத்துடனான விமானி அற்ற விமானம் பயன்படுத்தப்பட்டு விடுதலைப் புலிகளின் மையங்களைத் தேடியறிய விமானப்படையினர் உதவிசெய்தனர்.
உலகில் விமானப்படைகளிடையே தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி அதிகமான அனுபவங்களைப் பெற்ற படையாக ஸ்ரீலங்கா விமானப்படையே உள்ளது என நினைக்கின்றேன்.
உலகில் எந்தவொரு தீவிரவாத அமைப்பிற்கும் விமானப்படை தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஈராக், சிரியாவில் அதிகமான நிலத்தை கையகப்படுத்தி நிலைக்கொண்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் விமானப்படைத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திறன் இருக்கவில்லை.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம் விமானப்படைத் தாக்குதல்களை நடத்துவதற்கான திறன் இருந்தது. விடுதலைப் புலிகளின் விமானப் படைத் தாக்குதல்களினால் உலகத்திலுள்ள தீவிரவாத அமைப்புக்களுக்குப் புதுவித அனுபவம் கிடைத்தது.
இரவு நேரங்களில் மாத்திரம் இரைச்சலின்றி அமைதியாக கீழ் மட்டத்தில் இலகுவாகப் பயணிக்கக்கூடிய சிறிய விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.
அந்த நாட்களில் தாக்குதல் விமானங்களுக்கு எமது மக்கள் குரும்பை என பெயர் வைத்திருந்தனர். இந்த குரும்மைகளைப் பயன்படுத்தி அவர்கள் எங்கே தாக்கினார்கள்? கொலன்னாவ எண்ணெய் தாங்கிகள், கெரவலப்பிட்டிய எண்ணெய் குதங்கள், கட்டுநாயக்க விமான நிலைய முகாம், தலைமையகம் உட்பட முக்கிய நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
அதிர்ஷ்டவசமாக அந்த தாக்குதல்கள் வெற்றியளிக்கவில்லை. அந்த தாக்குதல்கள் சிலவேளை வெற்றியளித்திருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு தாக்குதல்களை ஆரம்பித்தபோது, முழு உலகமும் உற்றுநோக்கிப்பார்த்தது. விடுதலைப் புலிகளின் சிறிய விமானங்களின் எஞ்ஜின் இயந்திர உஷ்ணம் உட்பட எமது படைகளின் ஏவுகணைகளுக்கு அகப்படாத வகையில் கீழ்நோக்கியே பொருத்தப்பட்டிருந்ததாகவே கூறப்படுகின்றது. இதுபோன்ற தொழில்நுட்பங்களை சர்வதேசம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை.- என்றார்.