அவுஸ்திரேலியா - கான்பராவில் நேற்றுப் பெய்த ஆலங்கட்டி மழை பலத்த சேத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிய பந்து அளவுள்ள ஐஸ் கட்டிகளாக விழுந்த ஆலங்கட்டி மழையால் கண்ணாடியாலான கட்டடங்கள், பல நூற்றுக்கணக்கான வாகனங்களின் கண்ணாடிகள், வீடுகளின் கூரைகள் என்பன நொருங்கின.
பல மாதங்களாகத் தொடர்ந்த பேரழிவு காட்டுத் தீயைத் தொடர்ந்து அங்கு பெய்துவரும் மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளபோதும் நேற்று பெய்த ஆலங்கட்டி மழை பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
கான்பராவில் உள்ள கொமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் பிளாக் மவுண்டன் தளத்தில் 65 கண்ணாடி வீடுகளும், குறைந்தது ஐந்து கட்டடங்களும் நேற்றுப் பெய்த ஆலங்கட்டி மழையால் மோசமாக சேதமடைந்துள்ளன.
ஆலங்கட்டி மழையால் தமது அமைப்பின் கட்டடத்துக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது என கொமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு தலைமை அதிகாரி ஜூடி ஜீல்கே கூறினார்.
மேலும் அங்கு மழையுடன் ஏற்பட்ட புயலால் பருத்தி, பார்லி, கோதுமை பயிர்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கான்பரா விவசாய மற்றும் உணவு இயக்குனர் மைக்கேல் வான் லுக்கரன் காம்பாக்னே தெரிவித்தார்.
ஆலங்கட்டி மழை பெய்தபோது கண்ணாடி வீடுகள் உடைந்து ஆட்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால் அவ்வாறான வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதால் யாருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை.
ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 1900 பிரதேசவாசிகள் திங்கள் மதியம் முதல் இரவு 8 மணி வரை கான்பரா அவசர சேவைகள் முகாமைக்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்து உதவி கோரினர்.
ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் காப்பீட்டு நிறுவனத்திடம் 11 ஆயிரம்; முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.