யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் கொல்லப்பட்ட மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 36 ஆவது அணி மாணவி என்றும் காதல் விவகாரம் காரணமாக அவருடைய காதலன் என்று நம்பப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவராலேயே கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பேருவள என்ற பகுதியைச் சேர்ந்த றொசின் காஞ்சனா என்ற மாணவியும் அவருடைய காதலன் என்று நம்பப்படும் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் இராணுவச் சிப்பாயும் பண்ணைக் கடற்கரையில் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் மாணவி இராணுவச் சிப்பாயால் வெட்டிப் படுகொலை செய்தபின்னர் அவரை தள்ளி கடலில் வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெட்டியவர் அங்கு சென்ற மக்களுடன் முரண்பட்ட நிலையில் அங்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் அவரைப் பிடித்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சிப்பாய் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்.
இதனிடையே அந்தப் பகுதியிலிருந்து சடலம் உடனடியாகவே எடுக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.