ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், சர்வதேச கல்வியகமும் பிரகடனப்படுத்தியுள்ள சர்வதேச கல்வித்தினம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நாளை மறுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
சர்வதேச கல்வியகத்துடன் இணைந்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தலைமையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2மணிக்கு நடைபெறும்.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய கல்வி அமைச்சின் செயற்திட்டப் பணிப்பாளர் கந்தையா பத்மானந்தனும், சிறப்பு அதிதியாக சர்வதேச கல்வியகத்தின் சார்க் பிராந்திய ஆசிரிய சம்மேளன பிரதிப் பொதுச் செயலாளரும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், சங்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருமாகிய த.மகாசிவமும், கௌரவ அதிதியாக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் உபஅதிபர் த.கோபாலகிருஸ்ணனும், விசேட அதிதியாக வைத்திய கலாநிதி வை.தியாகராஜாவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
வளமான, ஆரோக்கியமான, அமைதியான மற்றும் நிலையான எதிர்கலத்திற்குரிய கல்வியின் பங்கினை எடுத்துக் காட்டும் நோக்கிலும், நிலையான கல்வி, காலநிலை மாற்றக்கல்வி உள்ளிட்ட 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு வழிவகுக்கவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இந்நிகழ்விற்கு கல்விப்புலம் சார்ந்த அறிஞர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு சங்கத்தின் வடமாகாண செயலாளர் ஜெ.நிஷாகர் அழைப்பு விடுத்துள்ளார்.