வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்சை இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் இன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
வடக்கின் முதலாவது பெண் ஆளுநர் என்றவகையில் நோர்வே தூதுவர் ஆளுநருக்கு தமது விசேட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதன்போது நோர்வே அரசால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்லும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட இருக்கும் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
இச் சந்ததிப்பின்போது மக்களிடம் மேம்படுத்தப்படவேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட வடக்குமாகாண ஆளுநர், மின்சார கட்டணங்கள் காரணமாக பல உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் பின்னடைவை கண்டுவரும் இக்காலகட்டத்தில் நோர்வே அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி செயற்த்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்களுக்கு பரிந்துரைக்க கூடியதாக இருக்கும் என்றும்,
வடக்கின் சிறப்பான பாரம்பரிய உற்பத்திப் பொருட்களுக்கான சிறந்த சந்தைவாய்ப்பை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றுக்கொள்வதற்கான தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதற்கும் சர்வதேச சந்தைப்படுத்தலுக்கான தொடர்புகளை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரைப்புகளுக்கும் நோர்வே அரசு தமக்கு உதவ வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் வடக்கு மாகாணத்தில் பல அபிவிருத்திகள் மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் அதற்கான ஒத்துழைப்புகளை பெறும் வழிவகைகள் தொடர்பில் நோர்வே தூதுவரிடம் ஆளுநர் கலந்தாலோசித்தார்.
இதன்போது ஆளுநரின் பணிகளுக்கு நோர்வே அரசால் உதவக்கூடியதாக இருக்கும் என்று நோர்வே தூதுவர் நம்பிக்கை வெளியிட்டார்.