யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் பகுதியில் பூசகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் பெண் செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொலைக்குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
படித்த மகளிர் திட்டம், எழுதுமட்டுவாள் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த இரத்தினம் குபேந்திரன் (வயது 56) என்பவர் வெட்டுக்காயங்களுடன் இன்று முற்பகல் கொடிகாமம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று தீவிர விசாரணை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸாருக்கு அந்தப் பகுதி மக்கள் குறித்த பெண் தொடர்பில் தகவல் வழங்கியிருக்கின்றனர்.
குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரித்தபோது குறித்த கொலையினை தானும் மற்றொரு ஆணும் இணைந்து மேற்கொண்டதாக அவர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரியவருகிறது.
கத்தியால் குத்தியும் இரும்புப் பைப்பால் தாக்கியும் சித்திரவதை செய்தே அவரைக் கொலை செய்ததாக குறித்த பெண் வாக்குமூலம் வழங்கியிருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண் கைதாகியுள்ள போதிலும் பெண்ணுடன் இணைந்து கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் நபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.
இதனிடையே குறித்த பெண் பிரபல தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவரின் உதவியாளராக செயற்பட்டவர் என்றும் கொலை செய்யப்பட்ட நபருடன் முன்னர் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.