உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு இன்று அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிவரும் கொரோனா வைரசுக்கு இதுவரை 381 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களிடமும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவை தாண்டி உலகின் பல நாடுகளிலும் பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.