கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் குழாய் வழியே மதுபானம் வந்ததையடுத்து அக்குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இது குறித்து தெரியவருவதாவது,
ஜோசி என்பவருக்கு சொந்தமான குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் 18 குடும்பங்கள் வசித்து வருகின்றன. வழக்கம் போல குடிநீர் தொட்டியில் மோட்டர் மூலம் நீர் நிரப்பப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இக்குடியிருப்பு வாசிகள் உரிமையாளரான ஜோசியிடம் வந்து குடிநீர் குழாயில் வரும் நீரில் மதுபான வாடை வருவதாக கூறினர்.
இதனால் குழப்பமடைந்த ஜோசி குடிநீர் எடுக்கும் கிணற்று நீரை பரிசோதித்த போது அந்த நீரிலும் மதுபான வாடை வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் உண்மை வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இக்குடியிருப்புக்கு அருகில் இயங்கிவந்த மதுபான கடை சட்டவிரோதமாக நடந்துவந்ததையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் காவல்துறையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்போது கைப்பற்றப்பட்ட 6000 லீட்டர் மதுபானம் வழக்கம்போல் குழி தோண்டி அதில் ஊற்றி அழிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அதிகாரிகள் தோண்டிய குழி குறித்த கிணற்றுக்கு அருகிலேயே இருந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரே இடத்தில் குழி தோண்டி ஊற்றப்பட்ட 6000 லீட்டர் மதுபானம் தற்போதுதான் நிலத்தடி நீரோடு கலந்து குறித்த கிணற்றில் சேர்துள்ளது.
இவ்வாறு பொறுப்பற்ற விதமாக மதுபானத்தை ஊற்றியது விசாரணையில் வெளிந்தததுடன் மூட்டை முட்டையாக மது போத்தல்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.