Thursday 18th of April 2024 02:44:44 AM GMT

LANGUAGE - TAMIL
நலிவடைந்துவரும் தமிழ்த் தேசிய அரசியல்!!
நலிவடைந்துவரும் தமிழ்த் தேசிய அரசியல்!!

நலிவடைந்துவரும் தமிழ்த் தேசிய அரசியல்!!


தனிநாடே வேண்;டும் எனக் கோரி முழு அளவிலான ஆயுதப் போராட்டம் ஒன்றை நடத்திய தமிழ்த்தரப்பு இப்போது ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான சுயாட்சி உரிமையுடைய அரசியல் தீர்வு வேண்டும் என இறங்கி வந்துள்ளது. ஆனால் சிங்களத் தரப்பு சிங்கள பௌத்த தேசியம் என்ற உயர்ந்த நிலைப்பாட்டை நோக்கி முன்னேறுவதிலேயே தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள தமிழ்த்தரப்பின் விட்டுக் கொடுப்பை அவர்களது தோல்வியின் அடையாளமாக ஆளுந்தரப்பு நோக்கி உள்ளது. அதனை அவர்களின் அரசியல் ரீதியான தாராளத்தன்மை என்று புரிந்து கொள்ளவில்லை. இது இலங்கை என்ற நாடளாவிய அரசியல் ரீதியான பற்று எனவும் கொள்ள முடியும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தையே விடுதலைப்புலிகள் ஆயுத முனையில் மேற்கொண்டிருந்தார்கள். தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்போடு அவர்கள் செயற்பட்டமைக்கு பேரினவாதிகளின் சகிப்புத்தன்மையற்ற நிலைப்பாடும், அரசியல் ரீதியாக விட்டுக்கொடுக்காத போக்குமே முக்கிய காரணமாகும்.

மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நடத்திய பேச்சுவார்த்தைகளையும், அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் இதய சுத்தியுடன் சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் நிறைவேற்றியிருந்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஆயுதமேந்திய விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் உருவாகியிருக்கமாட்டாது. அதேபோன்று ஆயுதப் போராட்டத்தை பலம் வாய்ந்த நிலையில் விடுதலைப்புலிகளும் முன்னெடுத்திருந்திருக்க மாட்டார்கள்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு உரிய கவனிப்பும் கரிசனையும் காட்டாமல் விட்டதன் விளைவாகவே தனிநாட:;டு கோரிக்கை எழுந்தது. தனிநாட்டு கோரிக்கையை முன்வைப்பதற்கு அரசியல் ரீதியாகப் பல காரணங்கள் இருந்தன. அத்தகைய ஒரு கடுமையான அரசியல் நிலைப்பாட்டைக் கைக்கொள்வதற்குத் தமிழ்த்தரப்பை, சிங்களப் பேரினவாத அரசியல் செயற்பாடுகளே உந்தித் தள்ளியிருந்தன.

ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் சமமான முறையில் வாழ வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பம். தனிநாடு ஒன்றை உருவாக்கி தனித்துவமாக வாழ வேண்டும் என்ற இனவாத சிந்தனை அவர்களிடம் எப்போதும் இருந்ததில்லை.

தமிழ்த்தலைவர்களின் தேசப்பற்று

நாடு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்ததும் மன்னர் ஆட்சிக் கால அரசியலில் இருந்து சிவில் சார்ந்த நவீன உலகொழுங்கிலான ஜனநாயக ஆட்சி முறைக்கு அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவே இருந்தார்கள். அதற்கேற்ற வகையில் அவர்கள் செற்பட்டிருந்தார்கள்.

ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு, சுதேசிகளாகத் தாங்கள் சொந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சுதந்திரப் போராட்;டத்தில் சிங்களத் தலைவர்களுடன் சரிசமமாக அர்ப்பணிப்புடன் தமிழ்த் தலைவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அந்த அர்ப்பணிப்பு என்பது ஏனையோருக்கு முன்மாதிரியான செயற்பாடாகவும் அமைந்திருந்தது. சிங்களத் தலைவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டபோது, இலங்கையர் நாம் என்ற மனப்பாங்கில் உரிமை சார்ந்த நிலையில் அவர்களுக்காகக் குரல் கொடுத்தார்கள். உறுதியாகச் செயற்பட்டு அவர்களைப் பாதிப்புகளில் இருந்து மீட்டெடுத்திருந்தார்கள். இதனை வரலாறு முக்கியதொரு நிகழ்வாகப் பதிவு செய்துள்ளது.

ஆனால் அந்த அர்ப்பணிப்பையும், அவர்களின் உண்மையான அரசியல் வேட்கையையும் சிங்களத் தேசியத் தலைவர்களாகக் கருதப்பட்டவர்கள் கபட நோக்கத்துடனேயே நோக்கினார்கள். உண்மையான தேசப்பற்றுடன் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு புதிய அரசியல் மாற்றத்திற்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற தாராளவாத அரசியல் நிலைப்பாட்டில் அவர்கள் செயற்படவில்லை.

அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் ஆக்கிரமிப்பு ரீதியிலான ஒரு போக்கில் அவர்கள் படிப்படியகச் செயற்பட்டார்களேயொழிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைத் தங்களுடன் பங்காளிகளாக உளப்பூர்வமாக ஏற்றுச் செயற்படவே இல்லை.

இனவாத, மதவாத அரசியல் கொள்கையில் காதல் கொண்டு அதனை அவர்கள் படிப்படியாக மறைமுக நிகழ்ச்சி நிரல் ஒன்றின் கீழ் செயற்படுத்தி வந்தார்கள்.

நாட்டுக்கு அவசியமான சுதேச மனப்பாங்கிலான ஆட்சி முறைக்குரிய அரசியலமைப்பை அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து உருவாக்கிச் செயற்பட அவர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக, சி;ங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் முன்னிலைப்படுத்துவதிலேயே அவர்கள் முனைப்பு காட்டியிருந்தார்கள். இதனை அவர்களுடைய செயற்பாடுகள் உள்ளங்கை நெல்லி;க்கனியாக வெளிப்படுத்தி இருப்பதை வரலாற்றில் காண முடியும்.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான ஒரு தசாப்தத்துக்கு உட்பட்ட காலத்திலேயே சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்ற இனவாத அரசியல் போக்கில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா நிறைவேற்றி இருந்தார்.

தவறிவிட்டனர்

அந்தக் சட்டத்தினால் எழுந்த குழப்ப நிலைமையே 1958 ஆம் ஆண்டு மிக மோசமான இன வன்முறையாக வெடித்து தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டார்கள். இந்த இன வன்முறைக்குப் பின்னரான காலத்திலும் சிங்கள அரசியல் தலைமைகள் மீதோ அல்லது சிங்கள இனவாத அசரியலின் மீதோ தமிழ்த்தரப்பு அரசியல் ரீதியாக வன்மம் கொள்ளவில்லை. மாறாக அவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான அரசியல் முனைப்பையே கொண்டிருந்தது.

அதேவேளை தங்களுடைய அரசியல் உரிமைகளுக்காக சிங்கள அரசியல் தலைமைகளுடன் தமிழ்த் தலைவர்கள் பேச்சுக்களில் ஈடுபட்டார்கள். பேச்சுக்கள் வெற்றி பெறாததன் காரணமாகவே அஹிம்சை வழியிலான போராட்டங்களில் அவர்கள் குதித்தனர். ஆனால் அவர்களுடைய போராட்டத்தை ஜனநாயகப் பண்புடனும், மனிதாபிமான நொக்கத்துடனும் அணுகுவதற்கு சிங்கள அரசியல் தலைமைகள் தயாராக இருக்கவில்லை.

தமிழ்த் தலைவர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை அவர்கள் ஒரு வேடிக்கை நிகழ்வாகவே நோக்கினார்கள். அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் போராட்டத்தை ஒரு சாதாரண நிகழ்வாகவும் காலப்போக்கில் அதனை மறக்கடித்துவிட முடியும் என்ற மனப்பாங்கிலேயே செயற்பட்டிருந்தார்கள். அதனால் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. பேரராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து, அடக்கி ஒடுக்கி போராட்டத்தை நசுக்குவதற்கான அதிகார வன்முறையையே ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்.

இந்த அரசியல் வன்முறையும், அரச அடக்குமுறையுமே தமிழ்த் தரப்பினரைத் தனிநாட்டுத் தீரமானத்தை நோக்கி வலிந்து தள்ளியது. அந்தத் தனிநாட்டுக் கோரிக்கையை 1977 ஆம் ஆண்டு தேர்தலில் முன்வைத்து போட்டியிட்டு அமோகமாகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்கள். ஆனால் அந்த தனிநாட்டுக் கோரிக்கையைப் பிரிவினைவாதமாக வன்முறைச் செயற்பாடாக சிங்கள அரசியல் தலைவர்கள் நோக்கினார்களேயொழிய அதில் உள்ள நியாயப்பாட்டை ஜனநாயகத்தின் மீதான பற்றுதலைப் புரிந்து கொள்ளவில்லை.

இத்தகைய பின்புலத்தில்தான் தமிழ்த்தரப்பு தமது மக்களைத் தற்காத்துக் கொண்டு அரசியல் உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராட நிர்பந்திக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஸ்ட வசமாக சிங்கள பௌத்த தேசியவாதத்தின் குறுக்குத் தந்திரோபயத்திற்கு அந்த ஆயுதப் போராட்டம் பலியாகிப் போனது.

முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற அந்த ஆயுதப் போராட்டம், தமிழ்த்தரப்புக்கும் யத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரச தரப்புக்கும் பல்வேறு படிப்பினைகளைத் தந்துள்ளது. ஆனாலும் அந்தப் படிப்பினைகளை இரு தரப்பினருமே கவனத்திற்கொள்ளத் தவறிவிட்டனர்.

தவறுகள்

முதலாவது விடயம், யுத்தத்தில் வெற்றிவாகை சூடிய அரச தரப்பினர், யுத்தத்திற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கண்டு யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் நாட்டை சுபிட்சத்தை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு முயற்சிக்கவில்லை.

அரசாங்கத்தின் இந்தத் தற்குறி அரசியல் போக்கிற்கு ஏற்ற வகையில் தங்களைத் தகைமைப்படுத்திக் கொண்டு ஒன்றிணைந்த வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய சாணக்கிய ரீதியிலான அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கு தமிழ்த்தரப்பினர் முயற்சிக்க வில்லை.

யுத்தத்திற்குப் பின்னரான உள்ளுர் மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகளுக்கு ஏற்றவாறு தங்களுடைய கொள்கைகளைக் குறுக்கிக்கொண்டார்களே தவிர, அவற்றின் ஊடக சூழமைவுக்கு ஏற்ற வகையில் தமது அரசியல் இலக்குளை நோக்கிய பயணத்தில் முனைப்புடன் செயலாற்றவில்லை என்பது இரண்டாவது விடயம்.

யுத்த முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் சிங்கள பௌத்த தேசிய இலக்கை நோக்கிய பேரினவாதிகளின் அரசியல் போக்குகளுக்கு பல வகைகளிலும் இணங்கிச் செயற்படுவதையே செயல்வழிக் கொள்கையாகத் தமிழ் அரசியல் தலைமைகள் குறிப்பாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரித்துக் கொண்டிருந்தது.

யுத்தத்தில் வெற்றிகண்ட 2009 ஆம் ஆண்டு கால ராஜபக்சக்களின் ஆட்சியில் எதிர்ப்பரசியலை கைக்கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, 2015 இல் ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்திருந்த நல்லாட்சி என்ற சாதகமான அரசியல் நிலைமையைக் கொண்டிருந்த காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய நகர்வுகளை தந்திரோபாய ரீதியில் முன்னெடுக்கவில்லை.

அவர்களுடைய நோக்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற இலக்கில் குறியாக அமைவதற்குப் பதிலாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு சிங்கள பௌத்த தேசியத்தினால் பாதிப்புகளை ஏற்படுத்த வல்ல நகர்வுகளைத் தாங்கள் முன்னெடுத்துவிடக் கூடாது என்பதிலேயே அதிக கரிசனை கொண்டதாக அமைந்திருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் நலன்களை வென்றெடுக்க வேண்டும் என்ற இலக்கு இதனால் பின்தங்கிப் போனது. நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற முதன்மை நிலை காரணமாகவே, அரசியல் தீர்வை உள்ளடக்கிய பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டைக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் அழுத்தத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பதில் தீவிரமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது.

புதிய அரசியலமைப்பு என்ற தாரக மந்திரம்

உள்நாட்டிலும்சரி, வெளிநாட்டிலும்சரி அந்த அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும்கூட, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, 'நோகாமல் நடந்து கொள்கின்ற' அரசியல் பாணியைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைக்கொண்டிருந்தது. இது சர்வதேச மட்டத்தில் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டிருந்த அரசுக்கு அந்த கட்டாய நிலையில் இருந்து 'விடுப்பு' பெறுவுதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தி இருந்தது.

அரசாங்கமும்சரி, சர்வதேசமும்சரி தமது நிலைப்பாடுகளில் தாங்கள் எதிர்கொண்டுள்ள நிர்ப்பந்தங்களுக்கு அமைய காய் நகர்த்தல்களை மேற்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்டு பல வருடங்களாக நீதிக்கும், அரசியல் தீர்வுக்குமாக அல்லாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் கஷ்ட நிலைமைகளும் அவற்றில் இருந்து அவர்கள் அவசரமாக விடுபட வேண்டிய தேவைகளும் முதன்மை நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வலியுறுத்தப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவு என்ற தளத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் படிப்படியாகக் குறைப்பதற்குக் கிடைத்திருந்த சந்தர்ப்பங்கள் கோட்டை விடப்பட்டிருந்தன. நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், சர்வதேச மட்டத்தில் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் நெருக்கடிகளை எதிர்கொண்டபோது அரசாங்கத்துடன் பேரம் பேசி காய்களை நகர்த்தி இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகளை தமி;ழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை.

நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலைப்பாட்டை மிகவும் நேர்மையாகவும், கனவான் நிலைப்பாட்டிலும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதிலேயே அது கவனம் செலுத்தி இருந்தது. இந்த இடத்தில் தமிழ் மக்களின் நலன்களிலும் பார்க்க அராசங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாடே மேலோங்கியிருந்தது. இதனால்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரச தரப்பினருக்கு சேவகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருந்தார்கள் என்று அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு வர்ணித்துள்ளார்.

சர்வதேச நெருக்கடி நிலைமையில் இருந்து காப்பாற்றப்பட்ட அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தலைமையாகக் கொண்டிருந்த தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாட்டம் கொண்டிருக்கவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தாரக மந்திரத்தை அப்படியே ஏற்றுச் செயற்பட்டதேயல்லாமல், அரச நிர்வாக மட்டத்தில் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய பல பிரச்சினைகளில் தீர்வு கண்டிருக்கக் கூடிய சில சிலவற்றுக்கும்கூட தீர்வு காண முயற்சிக்கவி;ல்லை. தழிழத்தேசிய கூட்டமைப்பும் அரசுக்கு அது தொடர்பில் அழுத்தத்தைப் பிரயோகிக்கவும் இல்லை.

ஊருக்கே உபதேசம்......

இத்தகைய ஒரு பின்னணியில்தான் நல்லாட்சி அரசாங்கம் பொல்லாத அரசாங்கம் என்ற வர்ணிக்கத்தக்க வகையில் செயல் வல்லமையற்றதாக உட்குழுப்ப அரசியல் சுழலில் சி;க்கி உள்ளுராட்சித் தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து 2019 ஜனாதிபதி தேர்தலிலும் கூட்டாட்சி நடத்திய ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மண்கவ்வி இருந்தன. இந்தத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் முன்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிமிர்ந்துகூட நிற்க முடியாமல் பலமிழந்து, செல்வாக்கிழந்து போயிருந்தது.

இந்தத் தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தனது முன்னோராகிய சிங்களத் தேசிய அரசியல் தலைவர்களின் வழியில் தமிழ் முஸ்லிம் மக்களாகிய சிறுபான்மை இன மக்களை ஒரு பொருட்டாகவே கருத்திற் கொள்ளாத ஒரு போக்கில் தனது அதிகாரங்களைப் பிரயோகித்து வருகின்றார்.

அந்த வகையிலேயே, நாட்டின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட வைபவத்தின்போது தமிழ் மொழிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகார உரிமையை மறுத்து தேசிய கீதத்தைத் தமிழில் பாட முடியாது என அறிவித்த அரசாங்கத் தரப்பின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகிய சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற உரை தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசாங்கத்தின் கொள்கை விளக்கத்தையும்;, அடுத்தடுத்து என்ன வகையில் அரசு எவ்வாறு செயற்படப் போகின்றது என்பதற்கான தெளிவுபடுத்தலையும் அரச தலைவர் என்ற வகையில் அந்த உரையில் ஜனாதிபதி வெளிப்படுத்துவார்.

அதற்கமைவாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இந்த நாடு ஒற்றையாட்சியுடைய நாடு என்பதைத் தனது உரையின் முதல் வசனத்திலேயே கூறிவிட்டார். அடுத்ததாக இந்த நாடு சிங்கள பௌத்த தேசியத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார். தனக்கு வாக்களித்த சிங்கள மக்களின் நலன்களுக்கே அதிக கவனம் செலுத்தப்படும் என்ற கசப்பான உண்மையையும் அவர் தனது சுதந்திர தினப் பேச்சில் உரைக்கத் தவறவில்லை.

ஊருக்கே உபதேசம் என்ற வகையில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும், அரசியல், மத உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாகவும் வாழ்வார்கள் என்ற உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

பெரும்பான்மை பலமில்லாத நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ள ஒரு போக்கில் அரச நிர்வாகத்தைக் கொண்டு நடத்துகின்ற நிலையிலேயே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச சிங்கள பௌத்த தேசியத்தை மேலாண்மை மிக்க வகையில் தனது அதிகார பலத்தின் ஊடாகக் கடைப்பிடிக்கின்றார் என்றால், வரப்போகின்ற பொதுத் தேர்தலில் அவர் எதிர்பார்க்கின்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றால் இன்னும் கூடிய அளவில் சிறுபான்மை இன மக்களை ஒதுக்கி வைத்துச் செயற்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

என்ன செய்யப் போகின்றார்கள்........?

ஜனாதிபதி என்ற வகையில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும் ஜனநாயக வழியிலமைந்த அரச தலைவராகவும் செயற்பட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இந்த சுதந்திர தினவிழாவில், எளிமையை வெளிப்படுத்தும் வகையில் சதாரண சிவிலுடையில் தோன்றியிருந்த போதிலும் தனது மேலங்கியில் இராணுவ பதக்கங்களை அணிந்து இராணுவ மயம்சார்ந்த சிவில் நிர்வாகச் செயற்பாட்டில் தனக்குள்ள ஈடுபாட்டை அடையாளப்படுத்தியிருந்ததைக் காண முடிந்தது.

இராணுவ போக்கிலான் ஆட்சி நிர்வாக முறைமையை 2005 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை கடைப்பிடித்துச் செயற்பட்டிருந்த ராஜபக்சக்களின் சகாப்தம் 2019 ஆம் ஆண்டு கோத்தாபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், மீண்டும் திரும்பியுள்ளது.

இம்முறை சிங்கள பௌத்த தேசியவாதக் கொள்கையை விரும்பி ஏற்றுள்ள பெரும்பான்மை இன மக்களின் அமோகமான வாக்குகளின் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள ராஜபக்சக்கள், நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பலத்தைப் பெறுவார்கள் என்றால் சிங்கள பௌத்த தேசியம் எல்லா அரசியல் நிலைமைகளிலும் மேலுயர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

அத்தகையதோர் அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மட்டுமல்ல, உரிமை சார்ந்த இருப்பும்கூட கடினமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கவே நேரிடும் என்பதிலும் எந்தேகமில்லை.

அத்தகையதோர் அரசியல் நிலைமையை நோக்கி நாடு நழுவிச் செல்கையில் எழப்போகின்ற அரசியல், வாழ்வியல், சமூக, பொருளாதார சாவல்களைத் தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது தெரியவில்லை.

ஒரு கடினமான அரசியல் நிலைமை உருவாகி வருகின்ற சூழலில் அடுத்த கட்டமாக என்ன செய்வது, எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து தமிழ் அரசியல் தரப்புக்கள் சிந்திக்கத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. வெறுமனே அடுத்து வரப்போகின்ற பொதுத் தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் நகர்வுகளையே காண முடிகின்றது.

ஆனால், அதற்கும் அப்பால் உருவாகவுள்ள நிலைமைகளைக் கவனத்திற் கொண்ட அரசியல் அணுகுமுறைகளையும் அவற்றுக்கு உகந்தவாறு தமிழ்த்தரப்பைப் பலப்படுத்தித் தயார்ப்படுத்துவதற்கான முயற்சிகளைக் காண முடியவில்லை.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE