மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய்சேதுபதி தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துவரும் விஜய்சேதுபதி அடுத்ததாக ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரித்விகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளார்கள்.
இதற்கடுத்தாக ‘துக்ளக் தரப்பார்’ திரைப்படத்திலும் அதனைத் தொடர்ந்து ‘லாபம்’ என்ற படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கும் படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயந்தாராவுடன் இணைந்து ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றியை பெற்றிருந்த போது மீண்டும் இந்த கூட்டணி இணையாதா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பிருந்தது. இவ் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் விக்னேஷ் சிவன்-விஜய்சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்குகிறது.