கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல துறைமுகங்களிலும் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டு 279 கனேடியர்கள் உட்பட 2000 பேருடன் இரு வாரங்களாக கடலில் தத்தளித்து வந்த எம்.எஸ் வெஸ்டர்டாம் உல்லாசப் பயணிகள் கப்பலை தனது துறைமுகத்தில் நிறுத்த கம்போடியா அரசு அனுமதித்துள்ளது.
எம்.எஸ் வெஸ்டர்டாம் சொகுசுக் கப்பலை நிறுத்த ஆசியாவில் 5 நாடுகளிடம் அனுமதி கோரப்பட்டபோதும் யாரும் அனுமதிக்கவில்லை.
இதனால் இரு வாரங்களாக கடலிலேயே இந்தக் கப்பல் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள உல்லாசக் கப்பலில் பயணித்த 200-க்கும் அதிகமானோர் கொரோனோ வைரஸால் பாதக்கப்பட்டுள்ள நிலையில் அச்சம் காரணமாக இந்தக் கப்பலை தமது துறைமுகங்களில் நிறுத்த பல நாடுகள் அனுமதிக்க மறுத்துவிட்டன.
எனினும் இந்தக் கப்பலில் இருக்கும் 2000-க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த சொகுசுக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை பாங்கொக்கில் கரைசேர முயன்றபோது அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தாய்லாந்து கடற்படைக் கப்பல் ஒன்று அந்தக் கப்பலை தாய்லாந்து குடாவில் இருந்து வெளியேற்றியது.
இதனைத் தொடர்ந்தே அது கம்போடியாவை நோக்கி பயணித்தது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இந்தக் கப்பல் துறைமுக நகரான சிஹானுவில்லேவில் நங்கூரமிட்டது. துறைமுகத்தில் இறங்குவதற்கு முன், கப்பலின் பயணிகளை கம்போடிய சுகாதார அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதித்தனர். இதில் பயணிகளுக்கு வைரஸ்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.
கம்போடிய பிரதமர் ஹன் சென் இந்தக் கப்பலில் வந்தவர்களை கைகுலுக்கி, பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றார்.
இந்நிலையில் கம்போடியாவின் இந்தச் செயல் மனிதாபிமானம் மற்றும் சர்வதேச ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாராட்டியுள்ளார்.