இலங்கையில் வலிந்து காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதுடன் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்களுக்காக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றன.
அவர்களின் போராட்டங்கள் வலிமிகுந்த நீண்டகால காத்திருப்பின் நினைவூட்டல்களாகும்.
குடும்பங்களில் இருந்து அவர்களின் அன்புக்குரியவர்கள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அவர்களின் குறித்த தகவல்கள் மறுக்கப்பட்டு வருகின்றன என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்காக இயக்குனர் பிராஜ் பட்நாயக் கூறியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பலர் இந்த நாளை (பெப்ரவரி -14) 'காதலர் தினம்' என்று கொண்டாடும் அதே வேளையில், இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் காணாலாமலாக்கப்பட்ட அன்புக்குரியவர்களின் தினமாக இன்றைய நாளைக் கடைப்பிடிக்கின்றன.
காணாமலாக்கப்பட்டவர்களின் நூற்றுக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தமது உறவுகளை நினைவுகூரும் வகையில் கொழும்பில் கூடியுள்ளனர்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் அலுவலகங்களை நோக்கி ஊர்வலமாகச் சென்று நீதி, உண்மை மற்றும் இழப்பீடு கோருகின்றனர்.
1980-களின் பிற்பகுதியிலிருந்து 60,000 முதல் 100,000 பேர் வரை இலங்கையில் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிக அதிக எண்ணிக்கையானோரை காணாமலாக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
இந்நிலையில் சத்தியத்தையும் நீதியையும் தேடும் சாட்சிகளையும் குடும்பங்களையும் பாதுகாக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.
மேலும் ஆட்களைக் கடத்திக் காணாமலாக்கியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் நீதி விசாரணை நடத்தி அவர்களைத் தண்டிக்கவும் இலங்கை தவறிவிட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள போராடும் குடும்பங்களின் முயற்சியை அரசாங்கம் முன்வந்து ஆதரிக்க வேண்டும்.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அதிகாரிகள் உடனடியாக தகவல்களை வழங்க வேண்டும்.
போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியர்கள் சுயாதீனமாக விசாரிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்; எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்காக இயக்குனர் பிராஜ் பட்நாயக் கூறியுள்ளார்.