இலண்டனின் சுரங்கப்பாதை ரயில் மேடையில் இரண்டு எலிகள் மோதிக்கொள்ளும் புகைப்படம் இவ்வாண்டுக்கான சிறந்த சர்வதேச வன விலங்கு புகைப்பட விருதை வென்றுள்ளது.
சாம் ரவுலியின் என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டு 'சுரங்கப்பாதைச் சண்டை' ( Subway Squabble ) எனத் தலைப்பிடப்பட்ட புகைப்படமே விருதை வென்றது.
லண்டனில் உள்ள சர்வதேச இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ( Natural History Museum in London ) வழங்கும் இந்த வருடத்துக்கான மக்கள் தெரிவு சிறந்த வனவிலங்கு புகைப்பட விருது ( Wildlife Photographer of the Year's People Choice Award ) இப்புகைப்படத்துக்குக் கிடைத்துள்ளது.
இந்தப் போட்டிக்குச் உலகெங்கும் இருந்து சுமார் 48,000 புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் 25 புகைப்படங்கள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகின.
இரண்டாவதாக மதிப்பிடப்பட்ட நிழற்படத்தை விட சாம் ரவுலியின் சுண்டெலிகளின் சுரங்கப்பாதைச் சண்டை புகைப்படம் 28,000 வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து தனது ருவிட்டரில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள வன வலிங்கு புகைப்பட கலைஞர் சாம் ரவுலி, எனது கனவு நனவானது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தப் புகைப்படத்தை எடுக்க ஒரு வாரம் முழுவதும் சுரங்கப் பாதையில் செலவிட்டுள்ளதாக சாம் ரவுலி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் இரவு பயணிகள் கைவிட்ட உணவுப் பொருள் ஒன்றைப் பெற இரண்டு எலிகளும் சண்டையிட்டன. இதன்போதே இந்தப் படத்தை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பொறுமையும் விடா முயற்சியும் சர்வதேச அளவில் ஒரு விருதை சாம் ரவுலிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.