இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
நேற்றிரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் தற்போதுவரை நீடித்து வருகிறது.
இதேவேளை, போராட்டத்தை அடங்கி- ஒடுக்க சென்னைப் பொலிஸார் கடும் அடக்குமுறைகளில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போராட்டக்காரர்களை விரட்ட பொலிஸார் மேற்கொண்ட தடியடியில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால் இதனை மறுத்துள்ள சென்னைப் பொலிஸார், இந்த முதியவர் இறந்ததற்கும் போராட்டத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் ஆரம்பமானது.
500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இதில் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
திடீரென அவர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 40 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
எனினும் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்த நிலையில் பொலிஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர். பொலிஸாரின் தடியடியில் ஒருவர் இறந்துவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவோர் தெரிவித்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இதேவேளை, போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில் 5 பொலிஸார் காயமடைந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பொலிஸாரின் அடக்குமுறைகளை அடுத்து சென்னை உட்பட தமிழகமெங்கும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
சென்னை - மாதவரம், அமைந்தகரை, மண்ணடி, புதுப்பேட்டை, எழும்பூர் உட்பட பல்வேறு இடங்களில் வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடியவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடக்குமுறையைக் கண்டித்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், செய்யாறு, கரூர், நாகபட்டினம், விழுப்புரம், ஆம்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சென்னை – வண்ணாரப்பேட்டையிலும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.