வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில் வெற்றுகாணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் இன்று காலை தோண்டும் பணிகள் இடம்பெற்றன. எனினும் அப்பகுதியில் எந்தப் பொருட்களும் அகப்படவில்லை.
நேற்று காலையிலிருந்து காணியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார், தடவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் பைகோ இயந்திரம் மூலம் தோண்டும் பணி இடம்பெற்றிருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஒருவர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் பிக்கான், அலவாங்கு, பூசணிக்காய் போன்றவற்றையும் மீட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 10 அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் எதுவும் வெளிப்படவில்லை.