ஈபிஆர்எல்எவ் வரதர் அணியில் இருந்து விலகி ஈபிஆர்எல்எவ் சுரேஸ் அணியின் ஊடாக கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த இரா.துரைரட்ணம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக தனது தலைமையிலான அணியை தனியான அணியாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகங்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற மூன்று கட்சிகளிடமும் தனது தலைமையிலான மட்டக்களப்பு அணியினை தனியான அணியாக அங்கீகரிக்குமாறும் தனக்கு கூட்டமைப்பில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பிலிருந்து தனக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்போது, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் ஈபிஆர்எல்எவ் கட்சி அங்கத்துவம் பெறுகின்றதே இவ்வாறான நிலையில் நீங்கள் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறீர்களே, இது எந்த வகையில் சரியானது? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்,
அதற்கு பதிலளித்த இரா.துரைரட்ணம் அதனை அவரிடமே கேட்கவேண்டும் என்று பதிலளித்தார்.