அவுஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை காரோடு வைத்து பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.
3 குழந்தைகளும் சம்பவ இடத்தில் காருக்குள்ளேயே கருகி பரிதாபமாக பலியாகினர். பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளின் தாய் பின்னர் உயிரிழந்தார்.
நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் 42 வயதான ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் என்பவரே மனைவி குழந்தைகளைக் எரித்துக் கொன்று தற்கொலை செய்துகொண்டவராவார்.
நியூசிலாந்து ரக்பி வாரீயர்ஸ் அணியில் இருந்த இவர் ரக்பி உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி விளையாட்டுகளில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற ரோவான், அவுஸ்திரேலியாவை சேர்ந்த உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளரான ஹன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணத்துக்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் குடியேறிய ரோவான் தனது மனைவி ஹன்னாவுடன் இணைந்து உடற்பயிற்சிக்கூடம் ஒன்றை நடத்திவந்தார்.
இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரோவான்ஹன்னா மற்றும் ஹன்னா ஆகியோர் பிரிந்தனர்.
அதன் பின்னர் ரோவான் தனியாக வசித்து வந்தார். 3 குழந்தைகளும் தாய் ஹன்னாவுடன் வாழ்ந்து வந்தனர்.
கணவன்-மனைவி இருவரும் பிரிந்த பிறகு அவர்கள் நடத்தி வந்த உடற்பயிற்சி கூடம் மூடப்பட்டது.
இந்த நிலையில் ஹன்னா, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் புதன்கிழமை பிரிஸ்பேன் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
செல்லும் வழியில் அவரது காரை வழிமறித்த அவரை பிரிந்து வாழ்ந்த ரோவான், அவருடன் பேச வேண்டுமென காரில் ஏறினார். கார் சென்று கொண்டிருந்தபோதே ரோவான், ஹன்னாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஹன்னா தனது பெற்றோர் வீட்டில் இருந்து சில மீற்றர் தொலைவுக்கு முன்னால் காரை நிறுத்தினார்.
அதன் பின்னர் அவர் ரோவானை காரில் இருந்து இறங்கும்படி கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த ரோவான் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஹன்னா மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீடிரென தீவைத்தார்.
இதில் தாயும் 3 குழந்தைகளும் எரிந்துகொண்டிருந்தபோதே ரோவான் கத்தியால் தன்னை தானே குத்தி தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து பலத்த தீக்காயங்களுடன் குழந்தைகளின் தாய் ஹன்னா வெளியே குதித்தார். குழந்தைகள் மூவரும் காருக்குள்ளேயே கருகி இறந்தனர்.
இதற்கிடையில் அந்த வழியாக சென்றவர்கள் காரில் தீக்காயங்களுடன் குதித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஹன்னாவை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் வைத்தியசாலையில் ஹன்னா உயிரிழந்தார்.
மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய் பிரதமர் ஸ்கொட் மொரிசன், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.