சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனை அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதுக்குத் தனியான நகர சபை வழங்குவதற்குக் கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் பல பிரதேசங்களில் புதிதாக நகர சபைகள் உருவாக்குவதற்கான தேவை காணப்படுவதால் ஒரு பிரதேசத்துக்கு மாத்திரம் விசேட வர்த்தமானி வெளியிடாமல் புதிதாக உருவாக்கவுள்ள நகர சபைகள் அனைத்துக்கும் ஒரே வர்த்தமானி வெளியிடக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது" - என்றார்.