கொழும்பு ஹோமாகம முன்னாள் நீதிவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற வழக்கில் குற்றவாளி என இனங்காணப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் மூன்று இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றமை சம்பந்தமான வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கை வரலாற்றில் நீதிபதி ஒருவருக்கு எதிராக வழங்கப்பட்ட அதியுச்ச தண்டனையாக இது உள்ளது என நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று(வியாழக்கிழமை) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், இலஞ்சமாக பெற்ற 3 இலட்சம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கொன்றில் பிரதிவாதிக்குச் சார்பாக தீர்ப்பை வழங்குவதற்காக 3 இலட்சம் ரூபா கையூட்டுப் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ், லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.