"அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தமிழ் - சிங்களப் புத்தாண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை தமது ஆதரவாளர்கள் மூலம் அதிகரிப்பதற்கான சதித்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் முன்னெடுத்து வருகின்றன."
- இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார் அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கினோம். ஆளும் தரப்பினருக்கு அன்று 44 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். எனினும், அரசைக் கொண்டுசெல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால், இன்று எமது அரசின் செயற்பாடுகளுக்கு இவர்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.
ஜனாதிபதியின் மக்கள் நலன் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகின்ற போதிலும் கணக்கு வாக்கெடுப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவரின் இரட்டைக் கொள்கை அம்பலமாகியுள்ளது" - என்றார்.