Thursday 28th of March 2024 03:18:25 AM GMT

LANGUAGE - TAMIL
19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ணத்தை  வென்றது பங்களாதேஷ்!

19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்!


19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை மூன்று விக்கெட்டுக்களால் வீழ்த்தி பங்களாதேஷ் அணி முதல் முறையாக சம்பினாகியுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் மொத்தமாக ஐந்தாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்த நடப்பு சம்பியன் இந்திய அணியை முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற பங்களாதேஷ் அணி எதிர்கொண்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பங்களாதேஷ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 177 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ஜெய்ஸ்வால் மட்டும் பங்களாதேஷ் பந்துவீச்சை தாக்குப்பிடித்து 88 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தார். இதைவிட திலக் வர்மா-38 மற்றும் ஜூரெல்-22 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தனர். இந்திய அணியின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர்.

பந்துவீச்சில் அபிஷேக் தாஸ் 3 விக்கெட்டுக்களையும், சூரிபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் சகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

46 ஓவர்களில் 170 ஓட்டங்களை பெறவேண்டும் என திருத்தி அமைக்கப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியும் ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 62 ஆக இருந்த போது மேலதிக ஓட்டமெதனையும் பெறாது 3 விக்கெட்டுக்களை இந்து தடுமாறியது பங்களாதேஸ். தொடர்ந்தும் இந்திய பந்துவீச்சு நெருக்கடியை ஏற்படுத்த 85 ஓட்டங்களை எடுப்பதற்குள் முன்னணி 5 விக்கெட்டுக்களை இழந்து தவித்த போது அணித்தலைவர் கைகொடுத்து தூக்கி நிறுத்தியிருந்தார்.

பின்னர் வந்தவர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறிய போதிலும் தனி ஆளாக நின்று போராடிய அக்பர் அலி இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்து 43 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தார்.

இறுதியில் 42.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்று முதல் முறையாக 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ் அணி.

பந்து வீச்சில் ரவி பிஷ்நோய் 4 விக்கெட்டுக்களையும் மிஸ்ரா 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக அக்பர் அலியும் தொடர் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE