இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள எழுவரை விடுவிக்க தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், தீர்மானமும் செல்லாது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுவரையும் விடுவிக்க தமிழ்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கபட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இறுதிக்கட்ட வாதங்கள் முன்வைப்பு!
இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் இன்று முன்வைக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் போது இந்திய மத்திய அரசின் சார்பில் கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபால் வாதங்களை முன்வைத்தார்.
தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் பூச்சியம் - மத்திய அரசு திட்டவட்டம்!
மத்திய அரசின் கீழ் உள்ள சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு இது என்பதால் மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் 7 பேரையும் விடுதலை செய்யவே முடியாது. தமிழ்நாடு அரசு பரிந்துரைப்பதும், அமைச்சரவை தீர்மானம் என்பதும் பூச்சியம் தான் என வாதிட்டிருந்தார்.
ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு கைவிரிப்பு!
இதற்கு பதிலளித்து தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் நடராஜன் வாதங்களை முன்வைத்திருந்தார். ஆளுநருக்கு பரிந்துரைப்பதுடன் தமிழ்நாட்டு அரசின் கடமை முடிந்து விட்டது. இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் வாதத்தை முன்வைத்திருந்தார்.
மத்திய அரசின் பதில் நீதிமன்ற அவமதிப்பு - நளினி வழக்கறிஞர் வாதம்!
வழக்கை தொடுத்த நளினி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் வழக்கறிஞர் பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என வாதிட்டிருந்தார்.
தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் எழுத்துபூர்வமாக நீதிமன்றத்திற்கு சமர்பிக்கும்படி உத்திரவிட்டு தீர்ப்பை திகதி குறிப்பிடாது ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.