படப்பிடிப்புத் தளங்களில் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பில் சீமான் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இந்தியன்-2 படப்பிடிப்புத்தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. மூவரது இழப்பினால் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், படக்குழுவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கேற்கிறேன்.
இவ்விபத்தில் தனது மருமகன் கிருஷ்ணாவை இழந்து நிற்கும் மதிப்பிற்குரிய கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களுக்கு என் ஆறுதல்கள்.
இனிவரும் காலங்களில் படப்பிடிப்புத் தளங்களில் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுவே கடைசி விபத்தாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.