நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சில் இந்திய 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் 55 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. 5 விக்கெட்டுக்களை இழந்து 122ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 165 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
38 ஓட்டங்களுடன் தொடர்ந்து ஆடிய அனுபவ வீரர் ரஹானேவும் 46 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். இறுதி வரிசையில் களமிறங்கிய முகமட் சமி 21 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை கௌரவமான நிலைக்கு உயர்த்தியிருந்தார்.
முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கி, நேற்றைய நாளில் அபாரமாக பந்துவீசி இந்திய முன்னணி வீரர்கள் மூவரின் விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த ஜேமிசன் மற்றும் அனுபவ வீரரான ரிம் சௌதி ஆகியோர் தலா 4 விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.
இதையடுத்து தனது முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது. தேநீர் இடைவேளை வரை 50.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்த் 159 ஓட்டங்களைப் பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 73 ஆக உயர்ந்த நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த அணித்தலைவர் கனே வில்லியம்சன் மற்றும் ரோஸ் ரெய்லர் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.
வில்லியம்சன்-67, ரெய்லர்-44 ஓட்டங்களையும் பெற்று ஆடிவரும் நிலையில் முதல் இனிங்சில் வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சார்பில், காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: