அண்மையில் இந்தியன்-2 திரைப்பட படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நேற்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளார்.
இவ்விபத்து நடைபெற்ற இடத்தை அடிப்படையாக கொண்டு நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்கினை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
விபத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த பாரம்தூக்கியை இயக்கிய ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார். காவல்துறையினரது தீவிர தேடுதலின் பின்னர் நேற்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நேற்று உத்தவிட்டுள்ளார்.
இதையடுத்து நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குத் தொடர்பான ஆவணங்களை உடனடியாக மத்திய குற்றப்பிரிவுக்கு வழங்கியுள்ளனர். குறித்த விபத்து வழக்கை பொறுப்பேற்ற மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இன்று தமது முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதல்கட்டமாக விபத்து ஏற்பட்ட போது சம்பவ இடத்தில் இருந்த நடிகர் கமல், இயக்குநர் சங்கர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக மூன்றுபேருக்கும் அழைப்பாணை அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.