அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனில் சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்த முயன்றதுடன் கடுமையாகத் தாக்கி காயமேற்படுத்திய 20 வயது இளைஞன் ஒருவர் இன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவுஸ்திரேலியா நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மேரி ஸ்ட்ரீட்டில் உள்ள வெஸ்டின் ஹோட்டலுக்கு வெளியே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது இளைஞன் கத்தியுடன் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திக்கொண்டிருந்தார்.
அவரின் தாக்குதலில் சுற்றுலாப் பயணி ஒருவரின் மூக்கு உடைந்து இரத்தம் வெளியேறியது. கத்தியால் குத்தப்பட்டு அவரின் உதட்டில் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. மற்றொரு பெண் சுற்றுலாப் பயணியையும் அவர் சரமாரியாகத் தாக்கினார் என புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் டோனி ஃப்ளெமிங் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் கத்தியைக் கீழே போடுமாறு பல முறை இளைஞனிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும் அதற்கு இணக்கவில்லை. இதனையடுத்தே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆட்களைத் தாக்கி கத்தியால் குத்திய அந்த இளைஞனின் நடத்தை விசித்திரமானது என சுற்றுலாப் பயணிகள் விவரித்துள்ளனர்.
இதேவேளை, இளைஞன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பொலிஸ் நெறிமுறை தர விசாரணையாளர்கள், குற்ற மற்றும் ஊழல் ஆணையம் ஆகியவை விசாரணைகளை நடத்தும் என ப்ளெமிங் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட இளைஞன் சம்பவத்தின்போது போதைப்பொருள் ஏதேனும் பாவித்திருந்தாரா? என்பது குறித்து ஆராய பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.