வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தென்னிலங்கையைச் சேர்ந்த சிறிய ரக வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொண்டிருந்தபோது பருத்தித்துறை நோக்கி கொழும்பிலிருந்து வந்த பயணிகள் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
பன்றிக்கெய்த குளம் பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்துச் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில் இருபதற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து பருத்தித்துறை டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்து என்று தெரியவருகிறது. விபத்தினை அடுத்து பேருந்துக்கு சிலர் தீ வைத்த நிலையில் தீ பரவி விபத்தில் சிக்கிய மற்றைய வாகனமும் எரிந்துள்ளதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.