தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாஞ்சனி, செயலாளர் லீலா, மற்றும் அனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமலநாயகி ஆகியோரே ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசு செய்வதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா. அரங்கினுள் இவர்கள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.
அதேநேரம், நாளை செவ்வாய்க்கிழமை ஜெனிவா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ் மக்கள் சமகாலத்தில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அங்கு உரையாற்றவுள்ளார்.