ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பந் ஆகியோர் ஜெனிவா செல்லவுள்ளனர்.
அவர்களுடன் பேராசிரியர்களான அருட்தந்தை குழந்தைசாமி, சேவியர், இளம்பரிதி உள்ளிட்ட 15 பேர் அடுத்து வரும் நாட்களில் அங்கு செல்லவுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து தமது கருத்துக்களை கூட்டத் தொடரில் இவர்கள் பதிவு செய்யவுள்ளனர்.
மேலும், இலங்கை அரசு ஐ.நா. தீர்மானத்திலிருந்து வெளியேறவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியை வழங்குவதற்குரிய மாற்றுவழிகளை உடன் கையிலெடுக்குமாறு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை இவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.